Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை- அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை- அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்தது.
ஆனால் அங்கீகாரம் வழங்காததால் கடந்த 3 ஆண்டுகளாக அக்கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர். அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்லூரி நிர்வாகம் கூறி வந்தது.
இந்நிலையில் ஜவுளி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கல்லூரிக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது மாணவர்களை அதிகாரியுடன் பேச அனுமதி வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது. ஆனால் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே டெக்ஸ்டைல் மேலாண்மை பட்டபடிப்பு, பட்டய படிப்புகளுக்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி அக்கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 250 பேர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாணவர்கள் கூறினார்கள். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரி இயக்குனர் காந்தி விடுமுறையில் சென்று விட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினார்கள்.